ஆண்டிபட்டி அருகே கண்காணிப்புப் பணியிலிருந்த காவலரை முன்விரோதத்தில் கத்தியால் குத்திய நபரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே குமணன்தொழு கிராமத்தில் மயிலாடும்பாறை போலீஸார் செவ்வாய்க்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சிதம்பரவிலக்கு கிராமத்தை சேர்ந்த ஆடு மேய்க்கும் தொழிலாளி லட்சுமணன்(56) அப்பகுதியில் உள்ள மதுபானக் கடை அருகே மது போதையில் ஒருவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அவரை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக தனிப்பிரிவு காவலர் ராஜசேகர் (37) கண்டித்துள்ளார்.
அப்போது லட்சுமணனுக்கும், ராஜசேகருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த லட்சுமணன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ராஜசேகரின் இடுப்புப் பகுதியில் குத்தி விட்டு தப்பியோடிவிட்டார். இதையடுத்து போலீஸார் மற்றும் பொதுமக்கள் ராஜசேகரை மீட்டு க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். சிதம்பரவிலக்கு அருகே உள்ள தோட்டப் பகுதியில் பதுங்கியிருந்த லட்சுமணனை போலீஸார் புதன்கிழமை கைதுசெய்தனர்.
இச்சம்பவம் குறித்து லட்சுமணனின் உறவினர்கள் கூறியது: காவலர் ராஜசேகருக்கும், லட்சுமணனுக்கும் ஒரு வழக்கு சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு லட்சுமணனை தேடி சிதம்பரவிலக்கு கிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு 10-க்கும் மேற்பட்ட போலீஸார் வந்ததாகவும், அப்போது லட்சுமணன் வீடு பூட்டிய நிலையில் இருந்துள்ளதால் அவர்கள் கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்து வீட்டிலுள்ள அனைத்துப் பொருள்களையும் அடித்து உடைத்து சேதப்படுத்தினர் என்றனர்.
இதுதொடர்பாக கடமலைக்குண்டு காவல் ஆய்வாளர் முருகன் கூறுகையில், கதவை உடைத்து லட்சுமணன் வீட்டிற் குள் சென்று போலீஸார் தேடுதல் வேட்டையில் மட்டுமே ஈடுபட்டனர். பொருள்களை உடைத்து சேதப்படுத்தவில்லை என்றார்.