பொறியாளர் பென்னிகுயிக் 178 ஆவது பிறந்த நாளையொட்டி தேனி மாவட்டம் லோயர்கேம்ப்பில் உள்ள அவரது மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தேனி உள்பட ஐந்து மாவட்டங்களின் பாசனம், குடிநீர் ஆதாரத்திற்காக முல்லைப் பெரியாறு அணையை கட்டியவர் கர்னல் ஜான் பென்னிகுயிக். இவர் பிறந்த தினமான ஜனவரி 15 ஆம் தேதியை தேனி உள்ளிட்ட 5 மாவட்ட மக்கள் ஆண்டு தோறும் கொண்டாடி வருகின்றனர்.
நிகழாண்டு லோயர்கேம்ப்பில் உள்ள பென்னிகுயிக் மணிமண்டபத்தில் உள்ள அவரது முழுஉருவ வெண்கலச்சிலைக்கு கம்பம் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.டி.கே.ஜக்கையன், தேனி மக்களவைத் தொகுதி உறுப்பினர் ரா.பார்த்திபன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.பி.எம். சையதுகான், முன்னாள் மாவட்ட செயலாளர் டி.சிவக்குமார், ஒன்றியச் செயலாளர் அ.இளையநம்பி, நகர செயலாளர் ரா.ஜெகதீஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாநில கொள்கை பரப்பு செயலாளர் தங்க.தமிழ்செல்வன், மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் ஆண்டிபட்டி தொகுதி பொறுப்பாளர் பா.கதிரேசன், எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை தலைவர் ஜெ.தீபா, அவரது கணவர் மாதவன், முல்லைப் பெரியாறு பாசன அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழு, சாரல், உரிமை மீட்பு ஆகிய பல்வேறு விவசாய சங்கங்கள், கூடலூர் ஒக்கலிகர் இளைஞர் அறக்கட்டளை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் சார்பில் பென்னிகுயிக் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. பெண்கள் மணி மண்டபம் முன் பொங்கல் வைத்து அனைவருக்கும் வழங்கினர்.