தேனி மாவட்டத்தில் பிராணிகள் வதை தடுப்புச் சங்கத்தில் உறுப்பினராக சேர விரும்புவோர், தேனி அல்லிநகரத்தில் உள்ள கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: தேனி மாவட்டத்தில் ஆடு, மாடு, நாய், கோழி போன்ற பிராணிகளுக்கு மனிதர்கள் மூலம் ஏற்படுத்தப்படும் இன்னல்களை தடுப்பதற்காக, கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் அலுவலகத்தில் பிராணிகள் வதை தடுப்புச் சங்கம் செயல்பட்டு வருகிறு.
இச் சங்கத்துக்கு தலைவராக மாவட்ட ஆட்சியரும், துணைத் தலைவராக மாவட்டக் காவல் கண்காணிப்பாளரும் செயல்படுகின்றனர். பிராணிகள் நலனில் ஆர்வமுள்ள பொதுமக்கள் இச் சங்கத்தில் உறுப்பினராகச் சேருவதற்கு, தேனி அல்லிநகரம் கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். உறுப்பினர் சேர்க்கைக்கு ரூ.100 நுழைவுக் கட்டணம், ஆண்டு சந்தா ரூ.200 அல்லது ஆயுள்கால உறுப்பினர் சந்தா ரூ.10,000 செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.