தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே உயர்மின்சாரம் செல்லும் மின்மாற்றியை விவசாயி இயக்குவதால் விபத்து ஏற்பட வாய்ப்பு இருப்பதாக, சமூக நல ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
குச்சனூர் முல்லைப் பெரியாற்றுச் சாலையில் கூடுதல் திறன்கொண்ட மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து விவசாய நிலங்கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்ட உயர்மின்அழுத்தம்கொண்ட மின்மாற்றியை மின்வாரிய ஊழியர்கள் பராமரிப்புச் செய்யாமல், துறைசாராத விவசாயி ஒருவர் எவ்வித பாதுகாப்பு உபகரணங்களின்றி இயக்கி வருவதுடன், அவ்வப்போது பழுதுகளை சரிசெய்யும் பணியிலும் ஈடுபட்டு வருகிறார்.
இது குறித்து சமூகநல ஆர்வலர்கள் கூறியது: மின்மாற்றியில் இரவு நேரங்களில் ஏற்படும் பழுதுகளை சரிசெய்ய மின்வாரிய ஊழியர்கள் வருவதில்லை. எனவே, தனிநபர் மூலமாக மின்மாற்றியை இயக்க அனுமதி அளித்துள்ளனர். இது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் செயல் என்பதுடன், மின்சார பயன்பாட்டில் முறைகேடு ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே, இச்செயலை தடுத்து நிறுத்துவதுடன், சம்பந்தப்பட்ட மின்வாரிய ஊழியர்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.