தேனி மாவட்டத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் மழை நீர் சேமிப்பு அமைப்புகளை பராமரித்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று, தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ம. பல்லவி பல்தேவ் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.
பள்ளிக் கல்வித் துறை சார்பில், தேனி அல்லிநகரம் அரசு மேல்நிலைப் பள்ளியில், அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு நடைபெற்ற பயிற்சிப் பட்டறைக்கு தலைமை வகித்து ஆட்சியர் பேசியது: பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது மட்டுமே மாணவர்களது வழக்கையின் வெற்றிக்கு வழிவகுக்காது. மாணவர்களின் நல்லொழுக்கம், சிந்தனைத் திறன் மேம்படுவதற்கு ஆசிரியர்கள் பயிற்சி அளிக்க வேண்டும். மாணவர்களின் தனித் திறனை கண்டறிந்து ஊக்குவிக்க வேண்டும். மாவட்டத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் மழை நீர் அமைப்புகளை பராமரித்து, ஒரு வாரத்துக்குள் தயார் நிலையில் வைத்திருக்க தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
முன்னதாக, அல்லிநகரம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ஆட்சியரின் தன்விருப்ப நிதியில் இருந்து ரூ.1.85 லட்சம் மதிப்பிலான அதிநவீன தொழில்நுட்ப தொடுதிரை கருவியை ஆட்சியர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமிநாதன், மருத்துவ நலப் பணிகள் இணை இயக்குநர் சரஸ்வதி, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மனநல மருத்துவர் ராஜேஸ், மாவட்டக் கல்வி அலுவலர் திருநாவுக்கரசு உள்பட பலர்
கலந்துகொண்டனர்.