தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே பாப்பம்மாள்புரத்தில் அமைந்துள்ள ரெங்கம்மாள் கோயிலில் வெள்ளிக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு, இரண்டு நாள்களாக நடைபெற்ற யாகசாலை பூஜையில், கணபதி ஹோமம், கோமாதா பூஜை உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டு, பல புண்ணிய ஸ்தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் பூஜிக்கப்பட்டது. வெள்ளிக்கிழமை, பூர்ணாஹூதி முடிந்து கலச குடம் புறப்பாடாகி, விமான கலசத்துக்கு புனித நீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது, வானத்தில் 4 கருடன் வட்டமிட்டதால், பக்தர்கள் பக்தி பரவசமடைந்தனர்.
பின்னர், பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. இதனையடுத்து, அம்மனுக்கு பால், பழம், பன்னீர், சந்தனம், மஞ்சள், தேன் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு, மகா அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, விழாக் குழுவினர் செய்திருந்தனர்.