தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சி வழியாகச் செல்லும் பி.டி.ஆர். பாசனக் கால்வாயில் சாக்கடை கழிவு நீர் கலக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முல்லைப்பெரியாற்றிலிருந்து திறக்கப்படும் பாசன நீர் பாளையம் பரவு கால்வாயில் வெளியேற்றப்படுகிறது. இந்த கால்வாயிலிருந்து பிரியும் பி.டி.ஆர். கால்வாய் மூலம் சீலையம்பட்டி, தப்புக்குண்டு, தாடிச்சேரி என 10 -க்கு மேற்பட்ட கிராமங்கள் பயன்பெறுகின்றன.
தேனி மற்றும் சின்னமனூர் ஒன்றியங்களில் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட விளை நிலங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாசன வசதி பெறுகின்றன. மேலும் இக்கால்வாயில் செப்டம்பர் மாதத்தில் திறக்கப்படும் பாசன நீரே கிணறு மற்றும் ஆழ்துளைக் கிணறுகளில் நிலத்தடிநீர் மட்டம் உயருவதற்கு காரணமாக அமைகிறது.
இக்கால்வாய் சின்னமனூர் நகராட்சியில் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுரங்கப்பாதையிலும், 2 கிலோ மீட்டருக்கு திறந்த நிலையிலும் செல்கிறது. நகராட்சி மையத்தில் செல்வதால் இக்கால்வாயை சுற்றியுள்ள குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் திறந்த கால்வாயில் கலக்கிறது. இந்த கால்வாயில் ஆண்டுக்கு 3 மாதங்கள் மட்டுமே பாசன நீர் செல்லும். கடந்த சில ஆண்டுகளாக கால்வாயின் இரு பக்கமும் குடியிருப்புகள் அதிகமானதால் அதிக அளவில் கழிவுநீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் கால்வாயில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய்களை பரப்பி வருகிறது.
எனவே, சின்னமனூர் நகராட்சி நிர்வாகம் குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரை பாதாள சாக்கடை திட்டத்தில் இணைத்து, பாசன நீர் செல்லும் கால்வாயில் கழிவு நீர் செல்வதை தடுத்த நிறுத்த வேண்டும். மேலும் கால்வாயில் குப்பைகள் அதிகம் குவிந்து இருப்பதால் அதனை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.