துப்புரவு தொழிலாளர்களுக்கு சம்பளம் தாமதம்: ஒப்பந்ததாரரைக் கண்டித்து கம்பம் நகராட்சி அலுவலகம் முற்றுகை

தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் ஒப்பந்த முறையில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு ஒப்பந்ததாரர் சம்பளம் வழங்காததால் வெள்ளிக்கிழமை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.


தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் ஒப்பந்த முறையில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு ஒப்பந்ததாரர் சம்பளம் வழங்காததால் வெள்ளிக்கிழமை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
 கம்பம் நகராட்சியில்  33 வார்டுகளில், நிரந்தர துப்புரவு பணியாளர்கள் 65 பேர், ஒப்பந்த அடிப்படையில் மதுரையைச் சேர்ந்த நிறுவனத்தின் மூலம் 107 பேர், சென்னையைச் சேர்ந்த நிறுவனத்தின் மூலம் 67 பேர் வேலை செய்கின்றனர். 
  இந்த நிலையில், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு ஜூன் 14 வரை சம்பளம் வழங்கவில்லை. இதனால் வெள்ளிக்கிழமை அவர்கள் பணிக்குச் செல்லாமல்  நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு, ஒப்பந்த நிறுவனத்தைக் கண்டித்து, ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
 கம்பம் தெற்கு காவல் நிலைய சார்பு-ஆய்வாளர் எஸ். சவடமுத்து, நகராட்சி சுகாதார அலுவலர் அரசக்குமார் ஆகியோர்  பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பளம் வழங்குவதில் காலதாமதம் ஏன் என்பது குறித்து ஒப்பந்ததாரரிடம் விசாரிக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். 
 பின்னர் நகராட்சி பொறியாளர் (பொறுப்பு) செல்வராணி, நகராட்சி மேலாளர் முனிராஜ், சுகாதார அலுவலர் அரசகுமார்  ஆகியோர் ஒப்பந்ததாரருடன் நகராட்சி அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர்.
      பின்னர்  ஒவ்வொரு மாதமும் 10 ஆம் தேதிக்குள் சம்பளம் வழங்க வேண்டும், பணப்பிடித்தத்திற்கு ரசீது வழங்க வேண்டும், ஒப்பந்த நிறுவனத்திற்கான அலுவலகம் திறந்து, ஒப்பந்த பணியாளர்களின் குறைகளை  அந்த அலுவலகத்தில் விசாரிக்க வேண்டும், நகராட்சி அலுவலகத்திற்கு வரக்கூடாது, இதில் மாறுதல் ஏற்பட்டால் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என  ஒப்பந்ததாரருக்கு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com