ஆண்டிபட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்  குடிநீர் வசதி செய்து தர மாணவர்கள் கோரிக்கை

ஆண்டிபட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த சில ஆண்டுகளாக முறையாக குடிநீர் கிடைக்காமல் மாணவர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

ஆண்டிபட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த சில ஆண்டுகளாக முறையாக குடிநீர் கிடைக்காமல் மாணவர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்த பள்ளியில் ஆண்டிபட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச்  சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். அதிகமான மாணவர்கள் படிக்கும் இந்த பள்ளியில் முறையான குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை. ஆண்டிபட்டி பேரூராட்சி நிர்வாகத்தின் மூலம் வழங்கப்பட்டு வந்த தண்ணீரும் கடந்த சில ஆண்டுகளாக விநியோகம் செய்யப்படவில்லை என்று கூறுகின்றனர். மேலும் பள்ளி வளாகத்தில் உள்ள ஒரு கிணற்றிலும் குறைந்த அளவு தண்ணீரே உள்ளது. இந்த தண்ணீரும் சுகாதாரமற்ற முறையில் இருப்பதால் அதனை குடிநீராக பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
 மேலும் இப்பள்ளிக்காக கடந்த ஆண்டு புதிய ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. அதிலும் போதுமான அளவு தண்ணீர் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் மாணவர்களும், ஆசிரியர்களும் குடிநீருக்காக அல்லாடும் நிலை உள்ளது. இது குறித்து பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திடம்  புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. மேலும் மாணவர்கள் குடிநீர் அருந்த அருகில் உள்ள ஒன்றிய அலுவலகம், வேளாண்மை அலுவலகத்திற்கும் செல்ல வேண்டிய நிலை உள்ளது. கோடை விடுமுறைக்கு முன்பே இருந்த தண்ணீர் தட்டுப்பாடு தற்போது மிகவும் அதிகரித்துள்ளது. பள்ளி வளாகத்தில் குடிநீருக்காக அமைக்கப்பட்டுள்ள குழாய்கள், தொட்டிகள் காய்ந்து குப்பை கிடங்காக காட்சியளிக்கிறது. எனவே அதிகமான மாணவர்கள் படிக்கும் ஆண்டிபட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதிய அளவிலான குடிநீர் கிடைக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளி மாணவர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com