குடியிருப்புக்கு சாலை வசதி: காவலர் குடும்பத்தினர் மனு
தேனியில் மகளிர் காவல் நிலைய காவலர் குடியிருப்புக்கு சாலை மற்றும் தெருவிளக்கு வசதி செய்து தரக் கோரி திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், மகளிர் காவல் நிலைய காவலர்கள் குடியிருப்பில் வசிக்கும் காவலர் குடும்பங்களைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் ஆட்சியரிடம் அளித்த மனு விபரம்: தேனியில் அரசு பல்துறை பெருந்திட்ட வளாகம் பின்புறம் மகளிர் காவல் நிலைய காவலர் குடியிருப்பு உள்ளது. இந்தக் குடியிருப்புக்குச் செல்லும் சாலையில் கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. சாலையில் தெருவிளக்கு வசதியில்லாததால் இரவில் இருசக்கர வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன. அரசு பல்துறை பெருந்திட்ட வளாகத்தில் இருந்து மகளிர் காவல் நிலைய காவலர் குடியிருப்புக்குச் செல்லும் 600 மீட்டர் தூர சாலையை சீரமைத்து, தெரு விளக்குகள் அமைத்துத் தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்திருந்தனர்.