தேனி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வை வெள்ளிக்கிழமை 14,694 மாணவ, மாணவிகள் எழுதினர்.
மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு வெள்ளிக்கிழமை தொடங்கி மார்ச் 19-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதுவதற்கு மாவட்டத்தில் உள்ள 136 அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 15,530 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். வெள்ளிக்கிழமை நடைபெற்ற மொழிப்பாடத்தேர்வில் 14,694 பேர் தேர்வு எழுதினர். 836 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத வரவில்லை.
உத்தமபாளையம் கல்வி மாவட்டத்தில் 18 தேர்வு மையங்களும், தேனி கல்வி மாவட்டத்தில் 23 தேர்வு மையங்களும், பெரியகுளம் கல்வி மாவட்டத்தில் 13 தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்வு கண்காணிப்புப் பணியில் 99 பறக்கும் படை குழு மற்றும் 6 நிலைக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
பழனிசெட்டிபட்டி பழனியப்பா நினைவு மேல்நிலைப் பள்ளி, சிலமலை அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய தேர்வு மையங்களில் மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.