தேனி மாவட்டம், ராயப்பன்பட்டி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், விவசாயி ஒருவர் புதன்கிழமை உயிரிழந்தார்.
ராயப்பன்பட்டி வடக்கு காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் வெ. ராசு (57). விவசாயியான இவர், புதன்கிழமை மாலை அருகே காமயகவுண்டன்பட்டியில் உள்ள உறவினரின் வீட்டு விசேஷத்துக்குச் சென்றுவிட்டு, இரவில் மொபட்டில் ஊர் திரும்பியுள்ளார். அப்போது, அணைப்பட்டியிலிருந்து ராயப்பன்பட்டி செல்லும் சாலையில் பழக்கடை அருகே பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், ராசு பலத்த காயமடைந்தார்.
அதையடுத்து, அவருக்கு கம்பம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே ராசு உயிரிழந்தார். இது குறித்து கம்பம் வடக்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.