மக்களவைத் தேர்தல் மற்றும் வாக்குச் சாவடி பணியில் பகுதி நேர ஆசிரியர்களையும் ஈடுபடுத்த தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
இது குறித்து மாவட்ட பள்ளிக் கல்வித் துறை அலுவலர்கள் கூறியது: பொதுத் தேர்வு பணியை முன்னிட்டு மக்களவை தேர்தல் பணிக்கு ஆசிரியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள இடங்களில், அரசுப் பள்ளிகளில் பகுதி நேர அடிப்படையில் ஓவியம், உடற் கல்வி, தட்டச்சு, கணினி ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்களை தேர்தல் மற்றும் வாக்குச் சாவடி பணியில் ஈடுபடுத்த தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
இதன்படி தேனி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தேர்தல் மற்றும் வாக்குச் சாவடி பணியில் ஈடுபட விருப்பம் தெரிவிக்கும் பகுதி நேர ஆசிரியர்கள், தபால் மூலம் தேர்தலில் வாக்களிப்பதற்கு அவர்களது விவரம் சேகரிக்கப்பட்டு வருகிறது என்றனர்.