பொள்ளாச்சியில் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து, தேனியில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் ஞான.திருப்பதி தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் முகமது அலி ஜின்னா முன்னிலை வகித்தார்.
இதில், பொள்ளாச்சியில் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும். இந்த வழக்கில் மெத்தனமாக செயல்பட்ட காவல் துறை அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய வேண்டும்.
பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலர் கிருஷ்ணசாமி, மேல்நிலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில துணைத் தலைவர் பொ.அன்பழகன், வருவாய்த்துறை ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் பாலமுருகன், ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்
சங்க மாவட்டச் செயலர் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பழனி : பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து பழனியில் பழனியாண்டவர் மகளிர் கலைக் கல்லூரி மாணவிகள் சனிக்கிழமை போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு முதல்வர் புவனேஸ்வரி மற்றும் பேராசிரியைகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் கலைந்து சென்றனர்.