தேனியில் வங்கியில் பணம் எடுத்துச் சென்ற கூலித்தொழிலாளியிடம், மர்மநபர் ரூ.1 லட்சத்தை திருடிச் சென்றது குறித்து வியாழக்கிழமை இரவு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தேனி, கருவேல்நாயக்கன்பட்டியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பாண்டியன்(58). இவர், தேனி பங்களாமேடு பகுதியில் உள்ள வங்கி ஒன்றில் தனது நகைகைளை அடகு வைத்து ரூ.1 லட்சம் கடன் பெற்றுள்ளார். இந்தப் பணத்தை துணிப்பையில் வைத்து, வங்கி முன் நிறுத்தியிருந்த தனது இருசக்கர வாகனத்தில் பையை தொங்க விட்டிருந்தாராம்.
இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு பாண்டியன் புறப்படும் போது அங்கு நின்றிருந்த நபர் ஒருவர், 50 ரூபாய் நோட்டு ஒன்று கீழே விழுந்துள்ளதாக கூறினாராம். அந்த ரூபாய் நோட்டை எடுப்பதற்காக பாண்டியன் கீழே குனிந்த போது, அவரது இருசக்கர வாகனத்தில் தொங்க விட்டிருந்த பணப் பையை மர்ம நபர் திருடிக் கொண்டு சென்று விட்டாராம்.இந்த சம்பவம் குறித்து பாண்டியன் அளித்தப் புகாரின் மீது, தேனி காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.