பெரியகுளத்தில் அகில இந்திய கூடைப் பந்தாட்டப் போட்டிகள் புதன்கிழமை முதல் தொடங்கின.
பெரியகுளத்தில் 60 ஆம் ஆண்டு அகில இந்திய கூடைப் பந்தாட்டப் போட்டிகள் மே 15 (புதன்கிழமை ) முதல் மே 21 (செவ்வாய்க்கிழமை) வரை நடைபெறுகிறது.
புதன்கிழமை மாலை நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக மேகமலை வனஉயிரின காப்பாளர் சச்சின்போஸ்லே துக்காராம் கலந்து கொண்டு போட்டியைத் தொடக்கி வைத்தார்.
மூத்த விளையாட்டு வீரர் து.சுப்பராயலு விளையாட்டு கழக கொடியை ஏற்றி வைத்தார். தமிழ்நாடு மின்சார வாரிய செயற்பொறியாளர் ச.மாறன்மணி மின்னொளியை இயக்கி வைத்தார்.
கனரா வங்கி முதுநிலை மேலாளர் ஆர்.சந்திரசேகரன் முன்னிலை வகித்தார்.
முதல் நாள் போட்டியில் பெரியகுளம் சில்வர் ஜூப்ளி ஸ்போர்ட்ஸ் கிளப் அணியும், செங்கோட்டை ரெட் போர்ட் கூடைப் பந்தாட்ட கழக அணியும் மோதின. இதில் செங்கோட்டை ரெட் போர்ட் அணி 65-47 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.
போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு பி.சி.சிதம்பரசூரிய நாராயணன் நினைவு சுழற்கோப்பை மற்றும் ரூ 60,000 , 2 ஆம் பரிசாக ரூ 40,000, 3 ஆம் பரிசாக ரூ 30,000 வழங்கப்படுகிறது. மேலும் சிறந்த விளையாட்டு வீரருக்கு ஹீரோ இருசக்கர வாகனம் வழங்கப்படுகிறது.
அணிக்கான நன்னடத்தை பரிசு, சிறந்த இளம் வீரர்களுக்கான பரிசு மற்றும் சிறந்த உள்ளூர் விளையாட்டு வீரருக்கான பரிசுகள் வழங்கப்படுகின்றன.
இப்போட்டிக்கான ஏற்பாடுகளை சில்வர் ஜூப்ளி ஸ்போர்ட்ஸ் கிளப் செயலாளர் பி.சி.சிதம்பரசூரியவேலு மற்றும் துணைத்தலைவர் எம்.அபுதாஹீர், பொருளாளர் சி.செல்வராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.