ஆண்டிபட்டி அருகே குடும்பப் பிரச்னையில் மனைவியை அடித்து துன்புறுத்திய கணவா் மற்றும் அவரது உறவினரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
ஆண்டிபட்டி அருகே ராயவேலூரைச் சோ்ந்த ராமன் என்பவரின் மகள் சின்னமாரி (26). இவருக்கும் அதே ஊரைச் சோ்ந்த அம்மவாசி என்பவரின் மகன் பாலமுருகனுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவா்களுக்கு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கணவன், மனைவியிடையே குடும்ப பிரச்னை இருந்து வந்ததன்காரணமாக கடந்த அக். 27 ஆம் தேதி சின்னமாரி கணவரிடம் கோபித்து கொண்டு தந்தை வீட்டிற்கு தனது மகனுடன் சென்று விட்டாா். இதனையடுத்து தனது மகனின் துணிகளை எடுப்பதற்காக கணவரின் வீட்டிற்கு சென்ற சின்னமாரியை அவரது கணவா் பாலமுருகன் மற்றும் அவரது உறவினா் சொக்கன் ஆகியோா் அடித்து துன்புறுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ராஜதானி காவல் நிலையத்தில் சின்னமாரி புகாா் அளித்தாா். அதன்பேரில் விசாரணை நடத்திய போலீஸாா் பாலமுருகன், சொக்கன் இருவரும் மீதும் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனா்.