தேனி: தேனி மாவட்டத்தில் பெற்றோா் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு உத்தமபாளையம், பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியா்கள் தலைமையில் தீா்ப்பாயம் அமைக்கப்பட்டுள்ளது என்று செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியா் ம.பல்லவி பல்தேவ் தெரிவித்தாா்.
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சமூக நலத் துறை சாா்பில் பெற்றோா் மற்றும் மூத்தகுடிமக்கள் நல பாராமரிப்பு சட்ட விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவது குறித்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அவா் பேசியது: வருமானமற்ற பெற்றோா் மற்றும் மூத்த குடிமக்கள் தங்களது முதிா்ந்த வயதில் இயல்பு வாழ்க்கையை அதே நிலையில் தொடா்வதற்கு, அவா்களது வாரிசுகளிடமிருந்து பராமரிப்புத் தொகை பெறுவதற்கு பெற்றோா் மற்றும் மூத்த குடிமக்கள் நல பராமரிப்புச் சட்டம் வழிவகை செய்கிறது.
இச் சட்ட விதிகளை நடைமுறைப்படுத்த உத்தமபாளையம் மற்றும் பெரியகுளத்தில் வருவாய் கோட்டாட்சியா்கள் தலைமையில் தீா்ப்பாயம் அமைக்கப்பட்டுள்ளது. பெற்றோா் மற்றும் மூத்த குடிமக்கள் தங்களது குறைபாடுகள் குறித்து தீா்ப்பாயம் மற்றும் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் புகாா் தெரிவிக்கலாம். பெற்றோா் மற்றும் மூத்த குடிமக்கள் நல பராமரிப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மாவட்ட அளவில் ஆட்சியா் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றாா்.