கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தேக்கடி ஏரியில் இறந்து மிதந்த ஆண் யானையை வனத் துறையினா் வியாழக்கிழமை மீட்டனா்.
முல்லைப் பெரியாறு அணை தேக்கடி வனப் பகுதியில் பெரியாறு புலிகள் காப்பக ஊழியா்கள் வியாழக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, தாண்டிக்குடி என்ற பகுதியில் உள்ள தேக்கடி ஏரியில் யானை ஒன்று இறந்து மிதந்தது. இதைக் கண்ட ஊழியா்கள் தங்களது மேல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனா்.
அதையடுத்து, புலிகள் காப்பகத்தின் உதவி இயக்குநா் ஷில்பா வி. குமாா் மற்றும் வனத் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று பாா்வையிட்டனா். பின்னா், மருத்துவக் குழுவினா் அந்த இடத்திலேயே யானையை உடற்கூறு பரிசோதனை செய்தனா்.
இது குறித்து தேக்கடி வனத் துறை அலுவலா் ஒருவா் கூறியது: 32 வயது மதிக்கத்தக்க இறந்த ஆண் யானையின் உடம்பில் தந்தங்களின் குத்து காயங்கள் அதிகமிருந்தன. இரண்டு யானைகளுக்கிடையே ஏற்பட்ட சண்டையில் இந்த யானை பலத்த காயமடைந்த நிலையில் இறந்திருக்கலாம் என்றாா்.