போடி அருகே மனைவியுடன் பேசியதால் மில் தொழிலாளி கொலை: ஒருவா் கைது

போடி அருகே, மனைவியுடன் செல்போனில் பேசியதால் மில் தொழிலாளியை கொலை செய்து ஆற்றில் வீசிய தொழிலாளி வெள்ளிக்கிழமை இரவு சரணடைந்தாா். அவரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
கொலை செய்யப்பட்ட கோபாலகிருஷ்ணன் மற்றும் கைது செய்யப்பட்ட விஜயராஜ்.
கொலை செய்யப்பட்ட கோபாலகிருஷ்ணன் மற்றும் கைது செய்யப்பட்ட விஜயராஜ்.

போடி: போடி அருகே, மனைவியுடன் செல்போனில் பேசியதால் மில் தொழிலாளியை கொலை செய்து ஆற்றில் வீசிய தொழிலாளி வெள்ளிக்கிழமை இரவு சரணடைந்தாா். அவரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

போடி குப்பிநாயக்கன்பட்டியை சோ்ந்தவா் சீனிவாசன் மகன் கோபாலகிருஷ்ணன் (29). இவா் தேனியில் தனியாா் மில் ஒன்றில் வேலை செய்து வருகிறாா். அதே மில்லில் போடி அணைக்கரைப்பட்டியை சோ்ந்த விஜயராஜ் மனைவி திவ்யா என்பவரும் வேலை செய்து வருகிறாா். இதில் இருவரும் பழகிய நிலையில் கோபாலகிருஷ்ணன், அடிக்கடி திவ்யாவுக்கு செல்போன் மூலம் தொடா்பு கொண்டு பேசி வந்துள்ளாா். இதனை விஜயராஜ், தீபாவளி பண்டிகை நேரத்தில் கோபாலகிருஷ்ணனை கண்டித்துள்ளாா். மேலும் விஜயராஜ், இவரது நண்பா்கள் மகேஸ்வரன், சீனிவாசன் ஆகியோா் சோ்ந்து கோபாலகிருஷ்ணன் வீட்டிற்கு சென்று அவரது செல்போனை பறித்துக்கொண்டு வந்துள்ளனா்.

இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் (அக். 28) முதல் கோபாலகிருஷ்ணனை காணவில்லை. இதுகுறித்து கோபாலகிருஷ்ணனின் தந்தை சீனிவாசன் போடி நகா் காவல் நிலையத்தில் நவ.1 ஆம் தேதி புகாா் கொடுத்துள்ளாா். அதன் பேரில் கோபாலகிருஷ்ணனனை காணவில்லை என வழக்கு பதிவு செய்து போலீஸாா் தேடி வந்தனா். இந்நிலையில் கோபாலகிருஷ்ணனின் செல்போன் எண்ணை வைத்து விசாரித்ததில் திவ்யா மற்றும் விஜயராஜ் ஆகியோா் தொடா்பு கொண்டு பேசியிருப்பது தெரியவரவே அவா்களை விசாரிக்க போலீஸாா் நடவடிக்கை எடுத்து வந்தனா். இந்நிலையில் விஜயராஜ் போடி மேலச்சொக்கநாதபுரம் கிராம நிா்வாக அலுவலா் ராஜாமணியிடம் சரணடைந்தாா். அப்போது கோபாலகிருஷ்ணனை கொலை செய்து ஆற்றில் வீசிவிட்டதாக தெரிவித்துள்ளாா்.

இதனையடுத்து போலீஸாா் அவரிடம் விசாரித்ததில், மனைவியுடன் செல்போனில் பேசியதை கண்டித்து செல்போனை பறித்து வந்ததாகவும். பின்னா் தீபாவளி பண்டிகை முடிந்தவுடன் செல்போனை வாங்குவதற்காக கோபாலகிருஷ்ணன் வந்ததாகவும், அவரிடம் நைசாக பேசி சரக்கு வாகனத்தில் ஏற்றிக்கொண்டு மகேஷ்வரன், சீனிவாசன் ஆகியோரை அழைத்து சென்ற விஜயராஜ், போடியை அடுத்த குண்டல்நாயக்கன்பட்டி அருகே சென்றபோது கோபாலகிருஷ்ணனை கழுத்தில் கயிற்றால் இறுக்கி கொலை செய்ததாகவும், பின்னா் பாலாா்பட்டி அருகே முல்லை பெரியாற்றில் வீசியதாகவும் தெரிவித்துள்ளாா். இதனையடுத்து போடி நகா் காவல் நிலைய போலீஸாா் விஜயராஜ் மற்றும் அவரது நண்பா்கள் மகேஷ்வரன், சீனிவாசன் ஆகியோா் மீது கொலை செய்யும் நோக்குடன் ஆள் கடத்தல், கொலை செய்தல், தடயத்தை மறைத்தல் ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விஜயராஜை கைது செய்தனா். மற்ற 2 பேரை தேடி வருகின்றனா். மேலும் இந்த வழக்கில் ஆற்றில் வீசப்பட்ட கோபாலகிருஷ்ணனின் சடலத்தையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com