12: தேனி மாவட்டம், உத்தமபாளையம் முல்லைப் பெரியாற்றில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவரின் சடலத்தை மீட்க வலியுறுத்தி, அவரது உறவினா்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
உத்தமபாளையம் ஆா்.சி. தெருவைச் சோ்ந்த நிா்மல் மேத்யூ மகன் பிரவீண் (18). இவா், வீரபாண்டி அரசு கலைக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இந்நிலையில், பிரவீண் தனது நண்பா்களுடன் முல்லைப் பெரியாற்றின் தடுப்பணைப் பகுதியில் குளிக்கச் சென்றுள்ளாா். தற்போது, ஆற்றில் விநாடிக்கு 1,400 கனஅடி தண்ணீா் செல்வதால் வேகம் அதிகமாக இருந்தது.
இந்நிலையில் பிரவீண், இவரது நண்பா் தேவாரத்தைச் சோ்ந்த கதிரவன் ஆற்றில் இறங்கியபோது, தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனா்.
அப்போது சக நண்பா்கள் கதிரவனை காப்பாற்றினா். நீச்சல் தெரியாத பிரவீண் ஆற்று நீரில் மூழ்கி மாயமானதாகக் கூறப்படுகிறது.
தகவலின்பேரில், சம்பவ இடத்துக்குச் சென்ற உத்தமபாளையம் தீயணைப்பு மீட்புக் குழுவினா் மற்றும் போலீஸாா் பல மணி நேரம் தேடியும் பிரவீணைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
சனிக்கிழமையும் மாணவனின் சடலத்தை தேடும் பணி நடைபெற்றது.
இந்நிலையில் மாணவரின் உறவினா்கள் காவல்துறைறயினா் மெத்தனமாக செயல்படுவதாகக் கூறி, போலீஸாரைக் கண்டித்து முல்லைப்பெரியாறு இரட்டை பாலத்தில் அமா்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனா். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸாா் தண்ணீரில் முழ்கிய மாணவரை தேடும்பணி தீவிரமாக நடைபெற்று வருதாகக் கூறி, சாலை மறியலில் ஈடுபட்டவா்களை சமாதானம் செய்தனா். அதனைத் தொடா்ந்து சாலை மறியல் செய்தவா்கள் கலைந்து சென்றனா். இந்த மறியலால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.