ஆண்டிபட்டி நகரில் பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டு பயன்பாடின்றி காணப்படும் போக்குவரத்து சிக்னல் விளக்குகளை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆண்டிபட்டி வழியாக மதுரை -கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. நகருக்குள் சாலை ஆக்கிரமிப்பு, சாலையோர கடைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சாலை மிகவும் குறுகலாக காணப்படுகிறது. இதன் காரணமாக நகரில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
பள்ளி நேரமான காலையும் மாலையும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக முத்துராமலிங்கத் தேவர் சிலை பகுதி, வைகை அணை சாலை பிரிவு, வேலப்பர் கோயில் சாலைப்பிரிவு ஆகிய பகுதிகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்பது வாடிக்கையாக நடந்து வருகிறது.
வாகன நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக ஆண்டிபட்டி எம்.ஜி.ஆர். சிலை அருகில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு போக்குவரத்து சிக்னல் விளக்குகள் அமைக்கப்பட்டன. ஆனால் இந்த சிக்னல் அமைக்கப்பட்ட நாள் முதல் இதுவரையில் பயன்பாட்டிற்கே வரவில்லை. இதன் காரணமாக நகரில் போக்குவரத்து நெரிசல் தொடர்கதையாகி வருகிறது.
போக்குவரத்து சிக்னல் விளக்குகள் அமைக்கப்பட்டாலும், அதனை இயக்கவும், நெரிசலை கட்டுப்படுத்தவும் முறையான போக்குவரத்து போலீஸார் இதுவரை நியமிக்கப்படவில்லை. இதனால்தான் போக்குவரத்து சிக்னல் விளக்குகள் இதுவரை பயன்பாட்டிற்கு வரவில்லை என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.
நகரில் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த பல ஆண்டுகளாக பயன்பாடின்றி காணப்படும் சிக்னல் விளக்குகளை செயல்படுத்த போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.