தேனி மாவட்டம் கம்பத்தில் ராணுவ வீரரின் வீட்டின் பூட்டை உடைத்து திருடிய இளைஞரை போலீஸார் கைது செய்து, பொருள்களை கைப்பற்றினர்.
கம்பம் மணி நகரத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் நாகபிரதீப். இவரது மனைவி மாரீஸ்வரி ( 26). கடந்த 6 ஆம் தேதி இவர் வீட்டைப் பூட்டிவிட்டு சின்னமனூரில் உள்ள தனது பெற்றோரின் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் செவ்வாய்க்கிழமை வீட்டிற்கு வந்தபோது, கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருந்துள்ளது. வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பித்தளை குத்துவிளக்கு, அண்டா, குடம், பூவாளி, கரண்டி, உள்ளிட்ட பாத்திரங்கள் மற்றும் பீரோவில் உண்டியலில் இருந்த ரூ. 2000 என மொத்தம் ரூ.27 ஆயிரம் மதிப்புள்ள பொருள்கள் திருடு போனது தெரியவந்தது. இது குறித்து கம்பம் தெற்கு காவல் நிலையத்தில் மாரீஸ்வரி அளித்தப் புகாரின் பேரில், ஆய்வாளர் கீதா, சார்பு- ஆய்வாளர் முத்து செல்வன் மற்றும் போலீஸார் சம்பவம் நடந்த வீட்டிற்குச் சென்று தடயங்களை சேகரித்தனர். பின்னர் சந்தேகத்தின்பேரில் அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்த் (25) என்பவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் திருடியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து திருடப்பட்ட பொருள்களைக் கைப்பற்றிய போலீஸார் ஆனந்தை கைது செய்தனர்.