தேனி மாவட்டம், கம்பம் பகுதியில் விளைந்துள்ள நாணல் தட்டைகளை வெற்றிலை நடவுப் பணிக்காக சேகரிக்கும் பணியில், விவசாயத் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் அதிகளவில் வெற்றிலை சாகுபடி நடைபெற்று வருகிறது. இதற்கு, தூணாக விளங்கக்கூடிய நாணல் தட்டைகள் அதிகம் தேவைப்படுவதால் விவசாய கூலி தொழிலாளர்கள் பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று நாணல் தட்டைகளை சேகரிக்கின்றனர்.
நாணல் தட்டைகளானது, ஆற்றங்கரையோரம், வாய்க்கால் உள்ளிட்ட நீர் தேங்கியுள்ள இடங்களில்தான் நன்கு செழிப்பாக வளரும். அதன்படி, தேனி மாவட்டத்தில் கம்பம் பகுதியில் உள்ள வீரப்பநாயக்கன் குளம், சேனை ஓடை, மஞ்சள்குளம், முல்லைப் பெரியாறு கரையோரம், சின்னவாய்க்கால்கள் ஓடும் பகுதிகளிலும் பெருமளவு நாணல்கள் கிடைக்கின்றன. மேலும், இங்கு விளையும் நாணல்கள் தரம்வாய்ந்ததாக இருப்பதால், கம்பம் பகுதியில் நாணல் தட்டைகளை சேகரிக்கும் பணியில் வெளி மாவட்ட விவசாயக் கூலி தொழிலாளர்கள் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.
இங்கு சேகரிக்கும் ஒரு நாணல் தட்டை கட்டில் 100 குச்சிகள் இருக்கும். இவை, 250 முதல் 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனை, விவசாயிகள் வாங்கிச் சென்று வெற்றிலை வளரவும், படரச் செய்யவும் பயன்படுத்துகின்றனர். சிலர் கூடைகள் தயாரிக்கவும், துணிப் பையின் கைப்பிடியாகவும், சிறுவர்களுக்கு புல்லாங்குழல் உள்ளிட்ட பல்வேறு மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிப்பதற்கும் வாங்கிச் செல்கின்றனர். இதனால், நாணல் தட்டைகளுக்கு கிராக்கி உள்ளதால், பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று நாணல் தட்டைகளை சேகரித்து வருவதாக, விவசாயத் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.