தேனி மாவட்டம் கடமலைக்குண்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கத்தில் உள்ள துணைத்தலைவர் உள்பட 8 உறுப்பினர்கள் கொலை மிரட்டல் விடுப்பதாக அதன் தலைவர் காவல் நிலையத்தில் சனிக்கிழமை புகார் அளித்துள்ளார்.
ஆண்டிபட்டி தாலுகா கடமலைக்குண்டு பகுதியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கம் செயல்பட்டு வருகிறது. இச்சங்கத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேர்தல் நடைபெற்றது. இதில் மொத்தம் 11 பேர் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன் தலைவராக காளீஸ்வரன் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் மீது கடந்த ஜூலை 31 ஆம் தேதி 8 உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். மேலும் அதில் உள்ள முருகவேல் என்பவரை தலைவராக தேர்ந்தெடுத்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் காளீஸ்வரன் சங்க அலுவலகத்திற்கு சென்ற போது 8 உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து கொலை மிரட்டல் விடுத்ததாக கடமலைக்குண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் துணைத்தலைவர் முருகவேல், சேர்மலை, தங்கம், பேச்சியம்மாள், லதாமகேஷ், ஜோதி முருகன், சேகர் உள்ளிட்ட 8 பேர் மீதும் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.