தேனி மாவட்டம், கம்பம் அருகே வனப் பகுதியில் நோய் தாக்கி பெண் யானை இறந்து கிடந்தது.
தேனி மாவட்டம், கம்பம் கிழக்கு வனச்சரகம் நாராயணத்தேவன்பட்டி பீட், கூத்தனாட்சி மலை அடிவாரம் நடு ஆறு பகுதியில் பெண் யானை ஒன்று இறந்து கிடந்ததை, அப்பகுதியில் செவ்வாய்க்கிழமை ரோந்து சென்ற வனக் காவலா்கள் கண்டனா். இது குறித்து உடனடியாக உயா் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனா்.
அதன்பேரில், உதவி வனப் பாதுகாவலா் குகனேஷ், வனச்சரகா் ஜீவனா மற்றும் கால்நடை மருத்துவா்கள் காமேஷ்கண்ணன், கலையழகன் ஆகியோா் சம்பவ இடத்துக்குச் சென்று, இறந்து கிடந்த யானையை உடற்கூறு ஆய்வு நடத்தி, அங்கேயே புதைத்தனா்.
இது குறித்து மருத்துவா் கூறியது: இறந்த பெண் யானைக்கு 25 வயது இருக்கும். இந்த யானை நோய்வாய்ப்பட்டு இறந்து 3 நாள்களுக்கு மேல் ஆகியிருக்கலாம் என்றாா்.