மேக்கிழார்பட்டி கிராமத்தில் சரிவர குடிநீர் வழங்கப்படாததைக் கண்டித்து அப்பகுதி மக்கள் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி மாவட்டம், அனுப்பபட்டி ஊராட்சிக்கு உள்பட்ட மேக்கிழார்பட்டி கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் குடிநீர் விநியோகத்திற்காக ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் குன்னூர் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் இருந்து குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. கடந்த சில மாதங்களாக குடிநீர் சரிவர வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது இந்நிலையில் இக்கிராமத்தில் அமைக்கப்பட்ட ஆழ்துளைக் கிணறுகளும் வறண்டு போனதால் கிராமத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதன் காரணமாக
அப்பகுதி பெண்கள் குடிநீருக்காக அருகில் உள்ள தோட்டப் பகுதிகளுக்குச் சென்று தண்ணீர் எடுத்து வந்தனர். இதனால் பெண்கள் முதியோர் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர்.
மேலும் குடிநீர் விநியோகத்திற்கு மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று ஊராட்சி நிர்வாகத்திடம் அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், அப்பகுதி மக்கள் குடிநீருக்காக அல்லாடும் நிலை ஏற்பட்டது. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து மேக்கிழார்பட்டி கிராம மக்கள் காலிக்குடங்களுக்கு ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவகலத்திற்கு வந்து, ஆணையாளர் அறை முன்பாக அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து ஒன்றிய அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இன்னும் 3 நாள்களில் மேக்கிழார்பட்டி கிராமத்தில் சீராக குடிநீர் விநியோகம் செய்வதாக உறுதியளித்ததை தொடர்ந்து முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த முற்றுகைப் போராட்டத்தால் சுமார் அரை மணி நேரம் பணிகள் பாதிக்கப்பட்டன.