தேனி மாவட்டம், கூடலூர் நகராட்சி அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிடச் சென்ற பொதுமக்களிடம், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர்.
கூடலூர் நகராட்சி காஞ்சிமரத்துறையில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். முற்றிலும் விவசாயப் பகுதி என்பதால், நாள்தோறும் ஏராளமான விவசாயத் தொழிலாளர்கள் வயல்களுக்குச் சென்று வருகின்றனர். இந்நிலையில், இப்பகுதியில் பல ஆண்டுகளாக சாலை, தெருவிளக்கு, குடிநீர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லையாம். இது குறித்து பலமுறை கோரிக்கை விடுத்தும் நகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்காததால், பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை ஊர்வலமாகச் சென்று முற்றுகைப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர்.
இதனிடையே, ஆணையர் (பொறுப்பு) புஷ்பலதா காஞ்சிமரத்துறை பகுதிக்குச் சென்று பொதுமக்களை சந்தித்து, விரைவில் அடிப்படை வசதிகளை செய்து தருவதாக உறுதியளித்தார். அதன்பேரில், பொதுமக்கள் முற்றுகைப் போராட்டத்தை கைவிட்டனர்.