தேனி மாவட்டம், சின்னமனூர் - உத்தமபாளையம் இடையிலான தேசிய நெடுஞ்சாலையில், தனியார் பேருந்தும், டிப்பர் லாரியும் செவ்வாய்க்கிழமை நேருக்கு நேர் மோதிக்கொண்டதில், பேருந்து ஓட்டுநர் உள்பட 19 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
மதுரையிலிருந்து கம்பத்தை நோக்கி தனியார் பேருந்து சென்றுகொண்டிருந்தது. உத்தமபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் வேம்படிக்களம் வழியாகச் சென்றுகொண்டிருந்தபோது, முன்னாள் சென்ற லாரியை முந்திச் செல்லமுயன்றது. அப்போது, எதிரே கேரளா மாநிலம் கொல்லத்திலிருந்து மதுரைக்கு கிரானைட் கற்களை ஏற்றச் சென்ற டிப்பர் லாரியுடன் நேருக்கு நேராக மோதியது. இதில், தனியார் பேருந்து ஓட்டுநரான மதுரை ஒத்தக்கடை அருகே உலகநேரியைச் சேர்ந்த தெய்வேந்திரன் மற்றும் பயணிகள் மதுரையைச் சேர்ந்த லட்சுமி, கம்பம் கே.ஜி.பட்டியைச் சேர்ந்த ராஜேந்திரன்(48), ஜெயராம்மூர்த்தி (37), ஈஸ்வர் (33), ராயப்பன்பட்டி தெய்வக்கனி(40) என 10 பெண்கள் உள்பட மொத்தம் 19 பேர் பலத்த காயமடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சின்னமனூர் போலீஸார், அப்பகுதியினர் உதவியுடன் காயமடைந்தவர்களை ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி சின்னமனூர் மருத்துவமனை மற்றும் தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாலை 6 மணி அளவில் நடந்த விபத்தின்போது மழை பெய்துகொண்டிருந்ததாலும், தேசிய நெடுஞ்சாலையில் வாகனப் போக்குவரத்து அதிகமாக இருந்ததாலும், மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டது. பின்னர், உத்தமபாளையம், கம்பம், கோம்பை பகுதிகளில் இருந்து ஆம்புலன்ஸ் வாகனங்கள் வரவழைக்கப்பட்டு மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன.
இந்த விபத்து காரணமாக, அச்சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து சின்னமனூர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.