தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சனிக்கிழமை அனுமதியின்றி படப்பிடிப்பு நடைபெற்றதால், ஆம்புலன்ஸ் வாகனத்தை பொது மக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தேனி க.விலக்கில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சனிக்கிழமை நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவர் பிரவீண் மற்றும் அவரது தந்தை சரவணன் ஆகியோரை மருத்துவ பரிசோதனைக்காக போலீஸார் அழைத்து வந்தனர்.
இந்நிலையில் அம் மருத்துவமனையில் ஏராளமான வாகனங்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் பரபரப்பாக சென்று வந்த வண்ணம் இருந்தன. இது குறித்து மருத்துவமனை ஊழியர்கள் விசாரித்ததில் நடிகர் சசிக்குமார் நடிப்பில் இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் படப்பிடிப்பு நடத்துவதாகக் கூறப்பட்டது. ஆனால் இதற்கு முறையாக அனுமதி பெறவில்லை எனக் கூறி ஆம்புலன்ஸ் வாகனத்தை ஊழியர்கள் தடுத்து நிறுத்தினர். இத்தகவல் பரவியதையடுத்து நோயாளிகள், உறவினர்கள், பொது மக்கள் உள்ளிட்டோர் ஆம்புலன்ஸ் வாகனத்தை சிறைப்பிடித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.