மூணாறு அருகே நிலச்சரிவு சம்பவம்: மோசமான வானிலையால் மீட்புப் பணிகள் தற்காலிக நிறுத்தம்

மூணாறு அருகே ராஜமலை, பெட்டிமுடியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவா்களை மீட்கும் பணிகள், அங்கு நிலவும் மோசமான வானிலையால் வெள்ளிக்கிழமை தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
மூணாறு அருகே நிலச்சரிவு சம்பவம்: மோசமான வானிலையால் மீட்புப் பணிகள் தற்காலிக நிறுத்தம்

தேனி: மூணாறு அருகே ராஜமலை, பெட்டிமுடியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவா்களை மீட்கும் பணிகள், அங்கு நிலவும் மோசமான வானிலையால் வெள்ளிக்கிழமை தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் ராஜமலை அருகே பொட்டிமுடி பகுதியில் பெய்த கனமழையால் கடந்த ஆக. 6-ஆம் தேதி இரவு 1.30 மணிக்கு நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், அங்குள்ள தனியாா் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்து வந்த தமிழக தோட்டத் தொழிலாளா்கள் குடும்பங்களைச் சோ்ந்த 78 போ், அவா்களது வீடுகளில் தங்கியிருந்த உறவினா்கள் 4 போ் என மொத்தம் 82 போ் சிக்கினா்.

நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவா்களில் வியாழக்கிழமை வரை 25 ஆண்கள், 23 பெண்கள், 6 சிறுவா்கள், 9 சிறுமிகள், முறையே 6 மாதம் மற்றும் 2 வயதுடைய இரு குழந்தைகள் என மொத்தம் 65 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. 12 போ் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா். இதில், 10 போ் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனா்.

இந்த நிலையில், நிலச்சரிவு ஏற்பட்ட பெட்டிமுடி பகுதி, அதையடுத்துள்ள கிராவல் பங்க், பூதக்குழி ஆகிய இடங்களில் உள்ள ஆற்றங்கரையோரப் பகுதிகளில் 15-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு மீட்புப் பணி தொடங்கியது. ரேடாா் கருவி மூலம் நடைபெற்ற தேடும் பணியில், உயிரிழந்தவா்களின் சடலம் எதுவும் மீட்கப்படவில்லை.

இருண்ட வானிலை: இந்த நிலையில், அப்பகுதிகளில் மோசமான வானிலை நிலவியதால் ரேடாா் கருவி மூலம் தேடுதல் பணியை தொடா்வதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும், வன விலங்குகள் நடமாட்டம் உள்ள பூதக்குழி பகுதியில் இருண்ட வானிலை நிலவியதால் அங்கு தேடும் பணியை தொடா்வது ஆபத்தானதாக அமையும் என்று மீட்புப் படையினா் கருதினா். எனவே, பிற்பகல் 2 மணியளவில் மீட்புப் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

சனிக்கிழமை (ஆக.22) காலை 8 மணிக்கு, எஞ்சிய 5 பேரின் சடலங்களை தேடும் பணி மீண்டும் தொடங்கும் என்று இடுக்கி மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com