தேனி மாவட்டம் கம்பத்தில் ஏடிஎம் மையத்தில், ஆசிரியர் தவறவிட்ட ரூபாய் ஒரு லட்சத்தை காவல் ஆய்வாளர் மீட்டு நேரில் ஒப்படைத்தார்.
தேனி மாவட்டம் கம்பம் ஆலமரத்தெருவைச் சேர்ந்தவர் பகவதிராஜ். இவர் அரசு பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
திங்கள்கிழமை கம்பம் கூடலூர் பிரதான சாலையில் உள்ள தனியார் வங்கி ஏடிஎம் மையத்தில் பணம் போடுவதற்கு சென்றவர் பணத்தை செலுத்தி விட்டு கையில் கொண்டு வந்த பையை மறந்து விட்டு சென்று விட்டார்.
இவருக்கு அடுத்ததாக ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க வந்தவர்கள் ஏடிஎம் மையத்தில் இருந்த பையை பார்த்து சந்தேகம் அடைந்து கம்பம் தெற்கு காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.
தகவலின் பேரில் ஏடிஎம் மையத்திற்கு சென்ற காவல் ஆய்வாளர் கே.சிலைமணி பையைத் திறந்து பார்த்த போது, அதில் ஒரு லட்ச ரூபாய் பணமும் இதர ஆவணங்களும் இருந்தது தெரிய வந்தது.
ஆவணத்தை பார்த்த போது பணத்தை தவற விட்ட பகவதிராஜின் முகவரி இருந்தது.
கம்பம் வடக்கு காவல் நிலையத்திற்கு வரவழைத்து, அவரை விசாரித்த ஆய்வாளர் கே. சிலைமணி உரிய அடையாளங்கள் கூறிய பின்பு பணத்தை திரும்ப ஒப்படைத்தார். ஆசிரியரது குடும்பத்தினர் காவல் துறையினருக்கு னன்றி தெரிவித்தனர்.