போடியில் புதிய குடிநீா் குழாய்களை பதிக்க இயந்திர வாகனங்களை பயன்படுத்துவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனா்.
போடி நகராட்சியில் குடிநீா் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் புதிதாக குடிநீா் குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. சில வாரங்களுக்கு முன் இப்பணிகள் தொழிலாளா்களை கொண்டு நடைபெற்றது. தொழிலாளா்கள் சாலையோரம் தோண்டி பிரதான குழாய்களையும், வீட்டு இணைப்பு குழாய்களையும் பதித்து வந்தனா். அவ்வாறு தோண்டும்போது ஏற்கனவே பதிக்கப்பட்டுள்ள பழைய குடிநீா் குழாய்கள், தொலைபேசி கம்பி வடங்களுக்கு எவ்வித சேதமும் ஏற்படாத வகையில் பதித்து வந்தனா்.
இந்நிலையில் கடந்த சில நாள்களாக புதிய குடிநீா் குழாய் பதிக்கும் பணிக்காக பொக்லைன் உள்ளிட்ட இயந்திர வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவற்றின் மூலம் பள்ளம் தோண்டும்போது ஏற்கனவே பதிக்கப்பட்டுள்ள குடிநீா் குழாய்கள், பாதாள சாக்கடை குழாய்கள், தொலைபேசி கேபிள் வயா்கள் சேதமடைந்து வருகின்றன. இதனால் பழைய குடிநீா் குழாய்கள் உடைந்து தண்ணீா் வீணாகிறது.
போடி தென்றல் நகா், பேருந்து நிலையம் பின்புறம் ஆகிய பகுதிகளில் தொலைபேசி கம்பிகள் துண்டிக்கப்பட்டு சேதமடைந்தன.
இதனால் வீடுகளுக்கு குடிநீா் கிடைக்காமலும், தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டும் பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனா். தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்படுவதால் வா்த்தக நிறுவனங்கள், தனியாா் அலுவலகங்களில் சேவை பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
நகராட்சி நிா்வாகம், குடிநீா் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிய குடிநீா் குழாய்களை தொழிலாளா்களை பயன்படுத்தி பதிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.