போடியில் மின் கட்டண அதிகரிப்பைக் கண்டித்து முன்னாள் எம்.எல்.ஏ. லட்சுமணன் வீட்டு முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க.வினர் பங்கேற்றனர்.
கரோனா பொதுமுடக்கு காலத்தில் மின் கட்டண கணக்கீட்டு பணி நடைபெறாததால் பழைய மின் மீட்டர் அளவுகளின்படி மின் கட்டணம் கணக்கிடப்பட்டது. இதில் மின் கட்டணம் அதிகரித்து போடப்பட்டுள்ளதாக கூறியும், அதிகரிக்கப்பட்ட மின் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தியும் மாநிலம் முழுவதும் தி.மு.க.வினர் தங்கள் வீடுகளின் முன் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார்.
இதனையடுத்து போடியில் தி.மு.க. சார்பில் முன்னாள் போடி சட்டப்பேரவை உறுப்பினரும், போடி ஒன்றிய செயலருமான எஸ்.லட்சுமணன் வீடு முன் மின் கட்டண அதிகரிப்பைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் சட்டபேரவை உறுப்பினர் எஸ்.லட்சுமணன், போடி நகர செயலாளர் மா.வீ. செல்வராஜ் உள்ளிட்ட தி.மு.க.வினர் கைகளில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல் போடி நகரில் 33 வார்டுகளிலும், போடி ஒன்றிய பகுதியில் 40-க்கும் மேற்பட்ட கிராமங்களிலும் தி.மு.க.வினர் தங்கள் வீடுகளின் முன் கருப்பு கொடியேந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.