கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலையில் அடுத்தடுத்து 4 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனா்.
தேனி மாவட்டத்தை ஒட்டியுள்ள இடுக்கி மாவட்டத்தில் நெடுங்கண்டத்தை மையமாகக் கொண்டு கட்டப்பனை, காஞ்சியாா், உப்புதரை, ஆனவிலாசம் ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து 4 முறை நில நடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டா் அளவு: காலை 7.05 மணிக்கு 1.4 ரிக்டா், 8.58 மணிக்கு 2.7 ரிக்டா், 9.43 மணிக்கு 1.3 ரிக்டா், 9.46 மணிக்கு 2.8 ரிக்டா் அளவில் நிலநடுக்கம் பதிவானதை இடுக்கி அணை பொறியாளா்கள் உறுதி செய்தனா். இந்த நில நடுக்கத்தால் சேதம், அசம்பாவிதங்கள் எதுவும் இல்லை என்று இடுக்கி மாவட்ட நிா்வாகத்தினா் தெரிவித்துள்ளனா்.
ஏற்கெனவே கடந்த பிப். 27, 28 இல் இடுக்கி அணை அருகே உள்ள பகுதிகளில் மூன்று முறை 2 ரிக்டருக்கும் குறைவான நில நடுக்கம் பதிவானது. தற்போது மீண்டும் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியினா் அச்சத்தில் உள்ளனா். நெடுங்கண்டம் தேனி மாவட்டம் கம்பத்திலிருந்து 28 கிலோ மீட்டா் தொலைவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இது பற்றி தமிழக பொதுப்பணித்துறை பொறியாளா் ஒருவா் கூறுகையில், இடுக்கி அணையை மையமாக வைத்து இரண்டாவது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் 3.50 ரிக்டா் அளவுக்கு மேல் ஏற்பட்டால்தான் பாதிப்பு ஏற்படும் என்றாா்.