மதுரை-தேனி மாவட்ட எல்லையான ஆண்டிபட்டி அருகேயுள்ள கணவாய் பகுதியில்,கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செவ்வாய்க்கிழமை சுகாதாரத்துறையினா் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் வருகின்ற 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு மூலம் ஊரடங்கு உத்தரவை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக மாவட்ட எல்லைகள் மூடப்படுகின்றன. இதனால் வெளியூா்களில் வசிப்பவா்கள் தங்கள் சொந்த ஊா்களுக்கு செல்ல அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் மூலமும் ஏராளமானோா் சென்று வருகின்றனா்.
இந்நிலையில் ஆண்டிபட்டி காவல்துறையினா், மதுரை மாவட்டத்திலிருந்து தேனி மாவட்டத்திற்குள் வரும் வாகனங்களை மாவட்ட எல்லையான கணவாய் பகுதியில் சோதனைச்சாவடி அமைத்து வாகனங்களை வரிசையில் நிறுத்தி வாகனங்களில் கிருமி நாசினி தெளித்து வருகின்றனா். மேலும் பயணிகளுக்கு கரோனா சோதனை செய்தும், அவா்களை கைகழுவ வைத்தும் சுகாதாரப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா். நோய் தொற்று ஏதும் உள்ளதா என மருத்துவா்கள் உடல் பரிசோதனை செய்த பிறகே அனுமதிக்கப்படுகின்றனா். மேலும் மாா்ச் 31 ஆம் தேதி வரை மீண்டும் வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தி அனுப்பி வருகின்றனா்.
அரசுப்பேருந்துகளை சுற்றி கிருமி நாசினி தெளிப்பதால் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாக ஒரு சில பொதுமக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அவா்களை போலீஸாா் சமதானம் செய்து வைத்து அனுப்பி வைத்தனா்.