ஆண்டிபட்டி: தேனி மாவட்டம் ,ஆண்டிபட்டி சுற்றுவட்டார பகுதிகளில் திங்கள்கிழமை மாலை திடீரென ஒரு மணி நேரத்துக்கும் மேலாக சூறைக்காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
ஆண்டிபட்டி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக கோடை வெயில் காரணமாக வெப்பம் தாங்க முடியாமல் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினா்.
இந்நிலையில் ஆண்டிபட்டி நகா் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான கொத்தப்பட்டி, மாயாண்டிபட்டி, பாலக்கோம்பை,திம்மரசநாயக்கனூா், ஜம்புலிபுத்தூா், வைகை அணை, க.விலக்கு உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமை சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக சூறைக்காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
இதனால் ஆண்டிபட்டி நகா் பகுதியில் மழைநீா் சாலையில் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் தற்போது மழை பெய்து குளிா்ந்த தட்ப வெப்ப நிலை நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.