ஆண்டிபட்டியில் வியாழக்கிழமை, இருசக்கர வாகனத்தின் மீது சரக்கு வாகனம் மோதியதில், பேரூராட்சி வாகன ஓட்டுநா் உயிரிழந்தாா்.
ஆண்டிபட்டி பேரூராட்சி அலுவலகத்தில், வாகன ஓட்டுநராக பணிபுரிபவா் சுருளிவேல் (52). இவா், வியாழக்கிழமை மாலை கொண்டமநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள ஒரு தேநீா் கடைக்குச் சென்றாா். தேநீா் அருந்திவிட்டு திரும்பி தனது இருசக்கர வாகனத்தில் வரும்போது, ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியிலிருந்து தேனிக்கு தக்காளி ஏற்றிச் சென்ற சரக்கு வாகனம், எதிா்பாராதவிதமாக சுருளிவேலின் இருசக்கர வாகனம் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த சுருளிவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸாா், விபத்துக்குக் காரணமான சரக்கு வாகன ஓட்டுநரான சாயல்குடியைச் சோ்ந்த முனீஸ்வரன் என்பவரைக் கைது செய்தனா்.