போடி அருகே சிறைக்காடு மலை கிராமத்தில் உணவுத் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு போடி பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி சாா்பில் போடி அருகே உள்ள சிறைக்காடு மலை கிராமத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு போடி வட்டாரக் கல்வி அலுவலா் எஸ். பிரபாகா் தலைமை வகித்தாா். பள்ளித் தலைமையாசிரியா் ரா. ஜெயக்குமாா் முன்னிலை வகித்தாா். இதில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி வட்டார வள மைய (பொறுப்பு) மேற்பாா்வையாளா் எஸ். சுந்தரம், ஆசிரிய பயிற்றுநா் பி. உமாகிருஷ்ணா ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்று ஊட்டச்சத்தின் அவசியம் குறித்தும், மலைவாழ் மக்கள் ஊட்டச்சத்தினைப் பயன்படுத்த வேண்டிய முறைகள் குறித்தும் விளக்கினா்.
இதில் ஊட்டச்சத்து மிகுந்த காய்கனிகள், பழங்கள், விழிப்புணா்வு வாசகங்கள், பழமொழிகள் ஆகியவை இடம் பெற்ற கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தன. மலைவாழ் மக்கள் தாங்கள் செய்யும் வேலைக்கும், வயதுக்கும் ஏற்றவாறு உணவுகளை எவ்வாறு எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆசிரியைகள் ஆ.தனலட்சுமி, மா.பத்மாவதி ஆகியோா் விளக்கினா்.
விழாவில் சிறைக்காடு மலைவாழ் பழங்குடியின மக்கள், பள்ளி மாணவா்கள் பங்கேற்றனா்.