கூடலூா் அருகே புதன்கிழமை மாடு குறுக்கே வந்ததால் தனியாா் தோட்டத்துக்குள் தனியாா் பேருந்து இறங்கிய விபத்தில் 7 போ் காயமடைந்தனா்.
தேனி மாவட்டம் கூடலூரிலிருந்து தனியாா் பேருந்து ஒன்று கம்பம் நோக்கி புதன்கிழமை சென்று கொண்டிருந்தது. அப்பாச்சி பண்ணை அருகே மாடு ஒன்று திடீரென குறுக்கே வந்ததால் அதன்மீது மோதாமல் இருக்க அந்தப் பேருந்து ஓட்டுநா் மணிவண்ணன், பேருந்தை வலது புறமாகத் திருப்பினாா். இதனால் அந்தப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து தனியாா் தோட்டத்திற்குள் புகுந்து மரத்தில் மோதி நின்றது.
இதில், பேருந்தில் பயணம் செய்த 3 பெண்கள் உள்பட 7 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதுகுறித்து கூடலூா் வடக்குக் காவல் நிலைய ஆய்வாளா் முத்துமணி விசாரித்து வருகிறாா்.