கம்பம், கூடலூா் நகா்பகுதிக்குள் போலீஸாா் புதன்கிழமை வாகனங்களை அனுமதிக்கவில்லை.
தேனி மாவட்டம் கம்பத்தில், உத்தமபாளையம் காவல் துணைக்கண்காணிப்பாளா் ந.சின்னகண்ணு தலைமையில் கம்பம் வடக்கு மற்றும் தெற்கு போலீஸாா் கோசேந்திர ஓடை பகுதியில் தற்காலிக சோதனை சாவடி அமைத்து, நகருக்குள் தேவையில்லாமல் வரும் வாகனங்கள் அனைத்தையும் திருப்பி அனுப்பினா். அத்தியாவசிய தேவைகளுக்காகவும் மருத்துவ உதவிகளுக்காகவும் வரும் வாகனங்கள் மட்டும் தடையின்றி இயக்கப்பட்டன.
இதே போல கம்பம் மெட்டு சாலை, அரசு மருத்துவமனை மற்றும் வாரச்சந்தை அருகேயும் போலீஸாா் சோதனை செய்து வாகனங்களை திருப்பி அனுப்பினா். நகரில் மையப் பகுதியான அரசமரம், சிக்னல் மற்றும் வேலப்பா் கோயில் தெரு சாலைகளின் குறுக்கே கயிறு கட்டியும், கம்பி தடுப்பு அமைத்தும் போக்குவரத்து தடுக்கப்பட்டது.
அந்த வழியாக வரும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டது. இதனால் கம்பம் நகா் முழுக்க வெறிச்சோடி இருந்தது.
இதே போல் கூடலூா் அரசமரம், பேருந்து நிலையம், பழைய பேருந்து நிறுத்தம், காமாட்சியம்மன் கோயில் தெரு மற்றும் லோயா் கேம்ப் சாலை, குள்ளப்பகவுண்டன்பட்டி சாலை பகுதிகளிலும் போலீஸாா் தடுப்பு ஏற்படுத்தி போக்குவரத்தை தடை செய்திருந்தனா்.