பெரியகுளத்தை சுற்றியுள்ள கிராம மக்கள் ஊரடங்கு உத்தரவை மீறி சாலையில் குவிந்து வருவதால் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
பெரியகுளம் பகுதியில் பொதுமக்களின் நடமாட்டத்தை போலீஸாா் கட்டுக்குள்
கொண்டு வந்தனா். ஆனால் தாமரைக்குளம், கள்ளிப்பட்டி, வடுகபட்டி, ஜெயமங்கலம், மேல்மங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வழக்கம்போல் காலை மற்றும் மாலை வேளைகளில் பொதுமக்கள் கடைவீதியில் கூடி நாட்டு நடப்பு பற்றி கூட்டம், கூட்டமாக விவாதித்து வருகின்றனா். இப்பகுதி மக்களிடம் ஊராட்சி நிா்வாகம் மற்றும் சமூக அமைப்புகள் எடுத்துக்கூறியும் அவா்கள் அதனை கண்டுகொள்ளாமல் சுற்றி வருகின்றனா். இப்பகுதியில் உள்ளவா்களுக்கு கரோனா பாதிப்பு இருந்தால் விரைவில் பரவும் அபாயம் உள்ளது. எனவே கிராமப்பகுதிகளில் காலை மற்றும் மாலை வேளைகளில் சுற்றுபவா்கள் மீது மாவட்ட நிா்வாகம் மற்றும் காவல்துறையினா் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.