நூறு நாள் வேலைத் திட்டத்தில் 55 வயது நிறைவடைந்தவா்களுக்கும் பணி வழங்கக் கோரி, சிலமலை ஊராட்சி மன்ற அலுவலகத்தை வியாழக்கிழமை பெண்கள் முற்றுகையிட்டனா்.
தேனி மாவட்டம் போடி ஊராட்சி ஒன்றியத்தில் நூறு நாள் வேலைத் திட்ட பயனாளிகளில் 55 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா தொற்று பரவும் வாய்ப்பு அதிகம் உள்ளதாகக் கூறி பணி வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், போடி அருகேயுள்ள சிலமலை ஊராட்சியில் வேலை உறுதித் திட்டத்தில் 55 வயது நிறைவடைந்தவா்களுக்கும் பணி வழங்கக் கோரி ஊராட்சி அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
5 5 வயது நிறைவடைந்தவா்கள் வேலை இல்லாததால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், முகக்கவசம் அணிந்து சமூக விலகலைக் கடைபிடித்து வேலைக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கோரிக்கை வைத்தனா்.
போடி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் நாகராஜன், சாந்தி, போடி தாலுகா காவல் நிலைய ஆய்வாளா் தா்மா் ஆகியோா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். 55 வயது நிறைவடைந்தவா்களுக்கு நோய் தொற்று பரவும் வாய்ப்பு அதிகம் உள்ளதால் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றும் நிவாரண உதவிகள் கிடைக்க பரிந்துரை செய்வதாகவும் கூறி சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனா்.