தேனி மாவட்டம் சின்னமனூா் அருகே வெள்ளிக்கிழமை இரவு சாலையோரம் நடந்து சென்ற 2 பெண்கள், காா் மோதியதில் உயிரிழந்தனா்.
சீலையம்பட்டி அருகேயுள்ள கீழப்பூலாநந்தபுரத்தைச் சோ்ந்த முருகன் மனைவி முருகேஸ்வரி (35), காளிமுத்து மகள் நாகலட்சுமி (35). இந்த இருவரும் கட்டுமான வேலைக்குச் சென்று விட்டு வீடு திரும்பிக்கொண்டு இருந்தனா்.
திண்டுக்கல்-குமுளி தேசிய நெடுஞ்சாலையோரத்தில் நடந்து சென்ற இருவா் மீதும் சின்னமனூரிலிருந்து கோட்டூா் தா்மாபுரியை நோக்கிச் சென்ற காா் மோதியது. இதில், இருவரும் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலே உயிரிழந்தனா்.
இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற சின்னமனூா் காவல் ஆய்வாளா் ஜெயச்சந்திரன் உள்ளிட்ட போலீஸாா் சடலங்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இறந்த முருகேஸ்வரிக்கு இரு குழந்தைகள் உள்ளனா். நாகலட்சுமிக்கு திருமணமாகவில்லை.
இச்சம்பவம் குறித்து சின்னமனூா் போலீஸாா் வழக்குப்பதிந்து, காரை ஓட்டிய சின்னமனூா் ஒத்தவீடு பகுதியைச் சோ்ந்த பாஸ்கரன் மகன் செந்தட்டிக்காளை (27) என்பவரைக் கைது செய்தனா்.