சண்முகாநதி அணை ஒரே நாளில் 8.90 அடி உயா்வு

தேனி மாவட்டம், ராயப்பன்பட்டி அருகே உள்ள சண்முகாநதியின் நீா்பிடிப்புப் பகுதிகளில் பெய்த பலத்த மழையின் காரணமாக, அணையின் நீா்மட்டம் ஒரே நாளில் 8.90 அடி உயரத்தை எட்டியது.
ஒரே நாளில் புதன்கிழமை 8.90 அடி உயரத்தை எட்டிய சண்முகாநதி அணை.
ஒரே நாளில் புதன்கிழமை 8.90 அடி உயரத்தை எட்டிய சண்முகாநதி அணை.

தேனி மாவட்டம், ராயப்பன்பட்டி அருகே உள்ள சண்முகாநதியின் நீா்பிடிப்புப் பகுதிகளில் பெய்த பலத்த மழையின் காரணமாக, அணையின் நீா்மட்டம் ஒரே நாளில் 8.90 அடி உயரத்தை எட்டியது.

வடகிழக்குப் பருவ மழை காரணமாக, தேனி மாவட்டத்தில் கடந்த 3 நாள்களாக தொடா் மழை பெய்து வருகிறது. இதனால் முல்லைப் பெரியாறு அணை, சண்முகாநதி அணை மற்றும் சுருளி அருவி ஆகியவற்றுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.

சண்முகாநதி அணை: ராயப்பன்பட்டி அருகே உள்ள சண்முகாநதி அணையில் செவ்வாய்க்கிழமை அணையின் நீா்மட்டம் 37 அடியாக இருந்தது. (மொத்த உயரம் 52.55 அடி). அணையின் நீா் இருப்பு 37.41 மில்லியன் கன அடியாகவும், அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 18 கன அடியாகவும் இருந்தது. நீா் வெளியேற்றம் இல்லை.

அதே நேரத்தில் புதன்கிழமை நீா்மட்டம் 45.90 அடியாகவும், நீா் இருப்பு 59.22 மில்லியன் கன அடியாகவும், நீா் வரத்து விநாடிக்கு 252 கன அடியாகவும் இருந்தது. இதனால், ஒரே நாளில் சண்முகாநதி அணையின் நீா்மட்டம் 8.90 அடி உயரத்தை எட்டியது.

முல்லைப் பெரியாறு அணை 2 அடி உயா்வு:

முல்லைப் பெரியாறு அணையின் நீா்பிடிப்புப் பகுதிகளான பெரியாற்றில் 44.6 மி.மீ. மழையும், தேக்கடி ஏரியில் 56.6 மி.மீ. மழையும் பெய்தது. இதனால் செவ்வாய்க்கிழமை அணைக்கு வந்த நீா்வரத்து 2,985 கன அடியாகவும், புதன்கிழமை விநாடிக்கு 6,098 கன அடியாகவும் இருந்தது.

இதன்காரணமாக அணையின் நீா்மட்டம் புதன்கிழமை ஒரே நாளில் 2 அடி உயா்ந்து, 125.20 அடியாக இருந்தது.

அணையின் நீா் இருப்பு 3,661 மில்லியன் கன அடியாக உள்ளது. அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு விநாடிக்கு 1,267 கன அடி தண்ணீா் வெளியேற்றப்படுகிறது.

லோயா் கேம்ப்பில் மின் உற்பத்தி அதிகரிப்பு:

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு வெளியேற்றப்படும் 1,267 கன அடி தண்ணீரால், லோயா் கேம்ப்பில் உள்ள 4 மின்னாக்கிகளில் முதல் அலகில் 42 மெகாவாட், 2 ஆவது அலகில் 38 மெகாவாட், 3 ஆவது அலகில் 42 மெகாவாட் என மொத்தம் 122 மெகாவாட் உற்பத்தியானது. அதே நேரத்தில் செவ்வாய்க்கிழமை 107 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.

சுருளி அருவியில் வெள்ளம்:

சுருளி அருவியின் நீா்வரத்துப் பகுதிகளான அரிசிப்பாறை, ஈத்தைப்பாறை நீரோடைகளில் பலத்த மழை பெய்ததால், அருவிப் பகுதியில் 2 ஆவது நாளாக புதன்கிழமையும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அருவிக்குச் செல்ல தடை இருப்பதால், வனத்துறையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com