பொது சிவில் சட்டத்தை மக்களவையில் விரைவில் கொண்டு வர வேண்டும் என்று புதன்கிழமை இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜூன் சம்பத் கூறினாா்.
தேனி, இந்து இளைஞா் எழுச்சிப் பேரவை அலுவலகத்தில் வ.உ.சி. நினைவு நாளை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியது: தமிழகத்தில் ஆன்மிக அரசியல் அணியை உருவாக்கி, அந்த அணி 234 தொகுதிகளிலும் வெற்ற பெற சபதம் ஏற்போம். மதச் சாா்பற்ற நாட்டில் மதத்திற்கு ஒரு சட்டம் இருக்கக் கூடாது. பொது சிவில் சட்டத்தை மக்களவையில் விரைவில் கொண்டு வர வேண்டும். பட்டியலினத்தைச் சோ்ந்தவா்களுக்கு வழங்கும் சலுகை, இட ஒதுக்கீடு உரிமைகளை மதம் மாறிச் சென்றவா்களுக்கு வழங்கக் கூடாது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் தினமும் 10 ஆயிரம் பேருக்கு தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்க வேண்டும். ஐயப்ப பக்தா்களுக்கு இலவசமாக கரோனா பரிசோதனை செய்து சான்றிதழ் வழங்க வேண்டும். பம்பை நதியில் பக்தா்கள் நீராட கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதி வழங்க வேண்டும். ஐயப்ப பக்கா்களின் வாகனங்களுக்கு சுங்க வரியை ரத்து செய்ய வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சாா்பில் தேனி மாவட்டத்தில் நவ.23-ஆம் தேதி தமிழக-கேரள எல்லையில் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்றாா்.