முல்லைப்பெரியாறு அணை அருகே கேரள அரசு புதிய அணை கட்டும் திட்டத்தை கண்டித்து ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் தொடர் ஜோதி பயணம் நடைபெறுகிறது.
முல்லைப்பெரியாறு அணை அருகே கேரள அரசு புதிய அணை கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கு பல்வேறு விவசாய அமைப்புகள் கண்டணம் தெரிவித்து வருகின்றன.
இதற்கிடையில் கேரள அரசின் புதிய அணை கட்டும் திட்டத்தை கண்டித்து, ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் சா்ர்பில் ராமநாதபுரம் பெரிய கண்மாயில் தொடங்கி சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் வழியாக தேனி, சீலையம்பட்டி, சின்னமனூர், மார்க்கையன்கோட்டை, அம்மாபட்டி, உத்தமபாளையம் கம்பம் வழியாக லோயர்கேம்ப் பென்னிகுயிக் மண்டபத்தில் ஜோதி பயணம் முடிவடைகிறது.
இது பற்றி விவசாய சங்கத்தலைவர் எஸ்.ஆர்.தேவர் கூறியது, “முல்லைப்பெரியாறு அணை அருகே புதிய அணை கட்ட வேண்டும் என்கிற கேரள மாநில அரசின், அரசியல் சாசன அமர்வுக்கு எதிரான போக்கினை கண்டித்தும், 2006 மற்றும் 2014 ஆகிய இரண்டு ஆண்டுகளில் முறையே உச்ச நீதிமன்றம் மற்றும் அரசியல் சாசன அமர்வு வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தக்கோரியும்,தொடர் ஜோதி பயணம் ராமநாதபுரம் பெரிய கண்மாயில் தொடங்குகிறது” எனத் தெரிவித்தார்.
மேலும் “இந்த ஜோதி பயணம், 168 கிராமங்கள், 22 நகரங்களை கடந்து அணையின் தமிழக உரிமையை மீட்பதற்கு உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலியை அவரவர் ஊர்களில் செலுத்துகிறது. பின்னர் லோயர்கேம்ப்பில் உள்ள பென்னிகுயிக் மண்டபத்தில் ஜோதி பயணத்தை முடிக்கிறோம். மத்திய மாநில அரசுகள் புதிய அணை கட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் தெரிவித்தார்.