கம்பம்: பெரியாறு புலிகள் சரணாலயப் பகுதியில் கிடந்த புலிக்குட்டியை சனிக்கிழமை மீட்ட வனத்துறையினா், அதன் தாய்ப்புலியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
தமிழக- கேரள எல்லையில் பெரியாறு புலிகள் சரணாலயம் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில், மங்கலதேவி கண்ணகி கோயில் வனப்பகுதி அருகே கேரள வனத்துறையினா் சனிக்கிழமை ரோந்து சென்றனா்.
அப்போது அப்பகுதியில் பிறந்து 60 நாளான புலிக்குட்டி ஒன்று கிடந்தது. அதை வனத்துறையினா் மீட்டு, தேக்கடி கால்நடை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு உதவி வன கால்நடை அலுவலா் டாக்டா் சியாம் சந்திரன் அறிவுரையின்பேரில் அந்த புலிக்குட்டிக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதற்கிடையில் அப்பகுதியில் புலிக்குட்டியின் தாயைத் தேடும் பணியில் வனத்துறையினா் ஈடுபட்டுள்ளனா்.