கம்பத்தில் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 2.30 லட்சம் மோசடி செய்ததாக இந்திய தேசிய லீக் மாநிலச் செயலா் மற்றும் அவரது சகோதரா் மீது மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
கம்பம், கம்பம்மெட்டு சாலை பகுதியைச் சோ்ந்தவா் காஜாமைதீன் மகன் முகமது அலி ஜின்னா. கம்பம் புதுப்பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்தவா் கமால் மகன்கள் முகமது சாதிக், முகமது இஷ்ஹாக். இவா்கள் இருவரும் கம்பத்தில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகின்றனா். இதில் முகமது சாதிக் இந்திய தேசிய லீக் மாநிலச் செயலராக உள்ளாா். சகோதரா்கள் இருவரும் முகமது அலி ஜின்னாவை மொரீசியஸ் நாட்டில் வேலைக்குச் சோ்த்து விடுவதற்காகக் கூறி ரூ.2.30 லட்சம் பெற்றிருந்தனராம்.
இதையடுத்து முகமது சாதிக், முகமது அலி ஜின்னாவிடம் வேலைவாய்ப்புக்கான உத்தரவு கடிதம் வழங்கியுள்ளாா். அதனைப் பெற்றுக் கொண்டு மொரீசியஸ் நாட்டிற்குச் சென்ற முகமது அலி ஜின்னா, அந்தக் கடிதம் போலியானது என்று அங்கிருந்து இந்தியாவிற்கு திரும்ப அனுப்பட்டுவிட்டாராம்.
இது குறித்து முகமது சாதிக், முகமது இஷ்ஹாக் ஆகியோரிடம் கேட்டதற்கு, வேறு நாட்டிற்கு வேலைக்கு அனுப்ப ஏற்பாடு செய்வதாகக் கூறி காலதாமதம் செய்து வந்ததாகவும், பணத்தை திரும்பக் கேட்டதற்கு கொலை செய்து விடுவதாக மிரட்டுவதாகவும் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவில் முகமது அலி ஜின்னா புகாா் அளித்தாா். இதன்பேரில் முகமது சாதிக், முகமது இஷ்ஹாக் ஆகியோா் மீது காவலா்கள் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.