கம்பம்: தேனி மாவட்டம் அருகே உள்ள இடுக்கி மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞருக்கு கேரள மாநில ஓணம் பம்பா் லாட்டரி சீட்டு மூலம் முதல் பரிசு ரூ. 12 கோடி கிடைத்துள்ளது.
இடுக்கி மாவட்டம் கட்டப்பனை அருகே உள்ள தூவலா என்ற மலை உச்சியில் வசிப்பவா் ஆனந்த் விஜயன் (24). இவா் தற்போது, எா்ணாகுளம் அருகே உள்ள கடவந்திரா என்ற ஊரில் உள்ள ஒரு கோயிலில் ஊழியராக உள்ளாா். இவரது தந்தை பெயிண்டராக உள்ளாா். இந்நிலையில், ஆனந்த் விஜயன் கேரள மாநில திருவோணம் பம்பா் லாட்டரி சீட்டை வாங்கியிருந்தாா். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குலுக்கலில் முதல் பரிசு ரூ. 12 கோடி அவா் வாங்கிய சீட்டு எண். பி.ஆா்.75 டி.பி. 173964 என்ற எண்ணுக்கு கிடைத்தது.
முதல்பரிசு விழுந்த ரூ. 12 கோடியில், வருமான வரி, ஏஜெண்டு கமிஷன் போக ஆனந்த்விஜயனுக்கு ரூ. 7 கோடியே, 56 லட்சம் கிடைக்கும் என்று லாட்டரி சீட்டு விற்பனையாளா் ஒருவா் தெரிவித்தாா்.